Last Updated : 23 Jan, 2020 09:21 PM

 

Published : 23 Jan 2020 09:21 PM
Last Updated : 23 Jan 2020 09:21 PM

மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு போலியாக அரசுப் பணியாணை வழங்கல்: மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் சிக்கினார்

மாவட்ட ஆட்சியர் போல் கையெழுத்திட்டு போலியான அரசுப் பணி ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அரசு அலுவலர் ஒருவரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (33). நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.3 லட்சம் வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பணம் கொடுத்துவர்களுக்கு தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆகியோரின் கையெழுத்துக்களைப் போலியாக போட்டு, போலியான அரசு பணி ஆணை தயாரித்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த நபர்கள் நாகேந்திரனைத் தேடி வந்த நிலையில், அவர் விருதுநகரில் இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர், மேலும் மூவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி நாகேந்திரனிடம் பேசி, அவரைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து சுற்றி வளைத்துப் பிடித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து பிடிபட்ட நாகேந்திரனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x