Last Updated : 22 Jan, 2020 02:40 PM

 

Published : 22 Jan 2020 02:40 PM
Last Updated : 22 Jan 2020 02:40 PM

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பழிக்குப்பழி: அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

கொலை செய்யப்பட்ட மூர்த்தி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அவரின் வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர், விராலிமலையில் பெட்ரோல் பங்க் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் களமாவூரை சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மூர்த்திக்கும், வீராச்சாமிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது .

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி மூர்த்தி அழைத்ததன் பேரில் வீராச்சாமி, அவரது மகன் முத்து, உறவினர்கள் ஜெயராமன், சிவசங்கு ஆகியோர் மூர்த்தியின் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த கூலிப்படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வீராச்சாமி உள்ளிட்ட நான்கு பேரையும் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலே வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய ஜெயராமன், அவரது தந்தை சிவசங்கு ஆகியோரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த மூர்த்தி, களமாவூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று (ஜன.22) அதிகாலை வீட்டின் அருகே விராலிமலை பிரிவு ரோட்டில் உள்ள ஒரு பாலக்கட்டையில் அமர்ந்திருந்த மூர்த்தியை 3 இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

இதில், தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அருகே இருந்தவர்கள் ஓடி வரவே அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். கீரனூர் போலீஸார் மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதனிடையே மூர்த்தியின் படுகொலையை கண்டித்து அவரின் உறவினர்கள் திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

கடந்த ஆண்டு தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதல் குற்றவாளியான மூர்த்தி இன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதையடுத்து பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தை புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் ஆய்வு செய்தார். பின்னர், "இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றோம், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யபடுவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x