Last Updated : 18 Jan, 2020 05:33 PM

 

Published : 18 Jan 2020 05:33 PM
Last Updated : 18 Jan 2020 05:33 PM

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: தென்காசி காவல் நிலையத்தில் ரஜினிகாந்த் மீது புகார்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் அ.மாசிலாமணி புகார் மனு அளித்துள்ளார்.

அப்போது, நிர்வாகிகள் அன்பரசு, சுப்பையா, குமணன், கலை. வெற்றிமணி, காசிராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அந்த மனுவில், தந்தை பெரியார் பற்றி அவதூறு மற்றும் வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘கடந்த 14.1.2020 அன்று சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை உருவப் படங்கள் அவமதிக்கப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

ரஜினி என்ன பேசினார்?

முன்னதாக துக்ளக் விழாவில் “1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல் உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்றது.

அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக் காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாகப் போட்டார் சோ” என்று பேசியிருந்தார்.

இதனை எதிர்த்தே திராவிடர் கழகத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பேரணி நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x