Last Updated : 13 Jan, 2020 02:49 PM

6  

Published : 13 Jan 2020 02:49 PM
Last Updated : 13 Jan 2020 02:49 PM

வடமாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: நான்கு இளைஞர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை; தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

இடமிருந்து வலமாக: புருஷோத்தமன், அன்பரசன், வசந்த் குமார், தினேஷ்

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

டெல்லியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த அந்த பெண், சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிச.1-ம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார்.

முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்த பெண்ணுக்கு சரியான திசைகள் தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண், தான் ஏற்கெனவே தங்குவதற்கு திட்டமிட்ட அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாமல் ரயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தினார்.

ஆட்டோ ஓட்டுநரும் நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டார். அந்த பெண் ஆங்கிலத்தில் தான் செல்ல வேண்டிய தெருவுக்கு செல்லுமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை பைபாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் திசைமாறி செல்கிறீர்களா என கேட்டுவிட்டு, தன்னுடைய நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநர், அந்த பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு அந்த பெண் தன்னுடைய 'டிராலி பேக்'கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையிலே நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். இளைஞர் பின்னால் மற்றொரு நண்பரும் சேர்ந்து வந்துள்ளனர்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் பைபாஸ் ரோட்டுக்கு சென்று அந்த பெண்ணை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞர்கள் தன்னுடைய நண்பர்கள் இருவரை வரவழைத்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டும் அந்த பெண்ணை அடித்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்துள்ளார்.

இதன்பிறகு அந்த பெண்ணை நான்கு இளைஞர்களில் ஒருவர் அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் மெயின்ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணும், இளைஞரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் வரும்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் தான் செல்போனை மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறி, ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை வாங்கி அதில் தன் நண்பர்களிடம் பேசி, "அந்த பெண்ணை கும்பத்தில் விட்டுவிட்டு வருகிறேன், நீங்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுங்கள்" என கூறியுள்ளார்.

கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே வந்தபோது ஆட்டோவிலிருந்து அந்த இளைஞர் இறங்கிகொண்டார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் 60 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இறங்கும் போது அந்த பெண் ஆட்டோவின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

தான் விடுதியின் அறைக்கு சென்றதும் உடல் நிலை முடியாமல் போனது. மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த சம்பவத்தை கூறியதும், தகவல் பரவி வங்கி நிர்வாகத்துக்கு சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்தனர்.

வங்கி நிர்வாகம் போலீஸாரிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை கூறினார். அதன்பிறகு தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞர் பேசியதை கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து போலீஸார் துப்பு துலங்கியதில், டெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் தினேஷ் (26), மோதிலால் தெரு வசந்த்குமார் (23), மூப்பனார் நகர் புருஷோத்தமன் (21), ஹலிமா நகர் அன்பரசன் (21) ஆகிய நான்கு பேரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் காமராஜர் சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி (26) ஆகிய ஐந்து பேரையும் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் கைது செய்தார்.

ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி

இந்த வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர்.

இதையடுத்து இவ்வழக்கு இன்று (ஜன.13) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை விசாரித்து, அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், நான்கு பிரிவுகளுக்கும் நால்வருக்கும் தலா 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x