துபாயிலிருந்து கொகைன் கடத்தல்: இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை: சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

துபாயிலிருந்து கொகைன் கடத்தல்: இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை: சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

துபாயிலிருந்து கொகைன் போதைப்பொருளைக் கடத்தி வந்து சிக்கிய இளம்பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு வந்த ரகசியத் தகவலின்படி, கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளைச் சோதனையிட்டபோது, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் கேடிவேஸ்டி லிசியா மோலிப் (23) என்பவரைச் சோதனையிட்டனர்.

அவர் 990 கிராம் கொகைனை கேப்சூல்களாக விழுங்கி வயிற்றில் வைத்து கடத்தியதாக கேடிவேஸ்டி லிசியா மோலிப் கைது செய்யப்பட்டார். அவரிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்தது நிரூபிக்கப்பட்டது.

பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைப்பொருளை வைத்திருந்ததற்காகவும், கடத்திய குற்றத்துக்காகவும் லிசியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in