கொடைரோடு அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் மூவர் பலி

திண்டுக்கல் மாவட்ட கொடைரோடு அருகே மூன்று பேர் உயிரிழந்த விபத்தில் சேதமடைந்த கார்.
திண்டுக்கல் மாவட்ட கொடைரோடு அருகே மூன்று பேர் உயிரிழந்த விபத்தில் சேதமடைந்த கார்.
Updated on
1 min read

கொடைரோடு அருகே நக்கம்பட்டி பிரிவு என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் தனது மகள் சம்யுக்தா, மகன் அஸ்வின், மைத்துனர் அண்ணாசாமி மற்றும் நண்பர் நாகர்கோயிலைச் சேர்ந்த சுந்தர் ஆகியோருடன் சில தினங்களுக்கு முன்பு காரில் சபரிமலை சென்றுள்ளார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் திண்டுக்கல் மாவட்ட கொடைரோடு அருகே நக்கம்பட்டி பிரிவு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நடுவில் உள்ள தடுப்பையும் தாண்டி எதிரே வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நரசிம்மன்(40), அண்ணாசாமி(45), சுந்தர்(42) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவர்கள் சம்யுக்தா, அஸ்வின் ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in