Last Updated : 01 Jan, 2020 04:24 PM

 

Published : 01 Jan 2020 04:24 PM
Last Updated : 01 Jan 2020 04:24 PM

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தகராறு: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

பெரியகுளம் அருகே, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மேல்மங்கலம். இங்கு நேற்று (டிச.31) இரவு 10-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபோதையில் ஜாலியாக ஆடிப்பாடி, ஆரவாரத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (24) தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இவரைத் தடுத்து நிறுத்தி வாழ்த்துகள் கூறி கேலி, கிண்டலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் கார்த்திக் தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த இவரை நண்பர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இரு பிரிவினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. தகவலறிந்த தேனி எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கார்த்திக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.1) சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி கார்த்திக்கின் உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் கதவுகளை பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அங்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கிருந்து சென்றவர்கள் பெரியகுளம் காந்தி சிலை அருகில் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x