Published : 31 Dec 2019 09:20 PM
Last Updated : 31 Dec 2019 09:20 PM

இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வு; 2019-ம் ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டிய 52,000 பேர் மீது நடவடிக்கை: போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இ.சலான் மூலம் ரூ.29.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள்:

* 2018-ம் ஆண்டைப் பொறுத்தமட்டில் 7,749 விபத்துகள் நடைபெற்றன. அதில் 1,260 பேர் விபத்தில் பலியாயினர். இந்த ஆண்டு விபத்துகளும் பலி எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது.

* 2019-ம் ஆண்டு மட்டும் 6,832 விபத்துகள் நடைபெற்றன. அதில் 1,224 பேர் விபத்தில் பலியாயினர். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்காக ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பரிந்துரை செய்யப் பட்டனர். இதுவரை சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 159 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* 73 ஆயிரம் பேர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய விவகாரத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* கடந்த இரண்டு வருடத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது.

* 2017-ம் ஆண்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய விவகாரத்தில் 27 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2018- ம் ஆண்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய விவகாரத்தில் 40 ஆயிரத்து 166 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு 51 ஆயிரத்து 900 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சிக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் இ.சலான் (e-challan) முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2019-ம் ஆண்டு மட்டும் 29 கோடியே 80 லட்சம் ரூபாய் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் வசூல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x