Published : 31 Dec 2019 12:08 PM
Last Updated : 31 Dec 2019 12:08 PM

எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவன் அடித்துக் கொலை: மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6).

நேற்று மாலை விளையாடச் சென்ற நகுலன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி கிடைக்காததால், எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் நகுலனை மாலை முதல் காணவில்லை. எங்களுக்கு முத்துலாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்ராஜ் மீது சந்தேகம் உள்ளது என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து போலீஸார் நேற்று இரவு அருள்ராஜை பிடித்து விசாரித்தனர். மது போதையில் இருந்த அவர், நகுலனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நகுலன் உடல் எங்கு கிடைக்கிறது என்பதை அவரால் சரியாக தெரிவிக்க முடியவில்லை.

இதை அறிந்த, நகுலன் உடலை கண்டுபிடித்துத் தரக்கோரி முத்துலாபுரம் கிராம மக்கள் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் எம்.கோட்டூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எட்டயபுரம் போலீஸார் முத்துலாபுரம் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே முத்துலாபுரம் காட்டுப்பகுதியில் நகுலன் உடலை போலீஸார் மீட்டனர்.

தகவல் அறிந்ததும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கிராம மக்களின் போராட்டத்தால் நான்கு வழிச் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்நிலையில் சிறுவன் நகுலனின் உடலை தங்களுக்கு காண்பிக்குமாறு கிராம மக்கள் கேட்டனர். அதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் அவர்கள் நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சிறுவன் உடலை கிராம மக்களுக்கு போலீஸார் காண்பித்தனர். அதன்பின்னரே கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவன் கொலைக்கு முன்விரோதம் காரணமா இல்லை வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x