Published : 30 Dec 2019 01:12 PM
Last Updated : 30 Dec 2019 01:12 PM

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடங்கியது

கிண்டி ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிபிஐ முறைப்படி விசாரணையைத் தொடங்கியது.

சென்னை ஐஐடியில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீஃப், கடந்த நவம்பர் 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனில், தனது தற்கொலைக்குக் காரணம் என பேராசிரியர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

பேராசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீஃப், தாயார், சகோதரி ஆகியோர் வலியுறுத்தினர்.

இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வழக்கு போலீஸாரிடம் இருந்து தற்போது மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி வசம் ஒப்படைப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மெகலினா இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ அல்லது தன்னாட்சி பெற்ற அமைப்பு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

அரசுத் தரப்பில், ''வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மத்திய குற்றப் பிரிவில் பணியாற்றி அனுபவம் பெற்ற 2 அதிகாரிகள் உள்ளனர். ஆகவே, வழக்கு விசாரணை உரிய முறையில் நடக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை நீதிபதிகள் அமர்வு பதிவு செய்துகொண்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து, மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் மனு அளித்தார்.

இதனிடையே சிபிஐ விசாரணை கோரிய மனு மீது, தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என கூறி சென்னை உயர் நீதிமன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பாத்திமா லத்தீஃபின் மரணம் குறித்த வழக்கை கடந்த 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ. இயற்கைக்கு மாறான மரணம் (174) என்ற பிரிவில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் பேசிய ஆடியோ, பாத்திமா பயன்படுத்திய டைரி, லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் சிசிபி போலீஸாரிடம் உள்ளது.

பாத்திமாவின் செல்போனைத் தடயவியல் துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பாத்திமா லத்தீஃப் தற்கொலை மெசேஜ் இருந்தது உண்மையே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாத்திமாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, மற்றவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x