Published : 24 Dec 2019 08:49 PM
Last Updated : 24 Dec 2019 08:49 PM

சென்னையில் முதல் கைது: குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படம் பார்த்தவர் சிக்கினார்

குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்து, அதைப் பகிர்ந்ததாக சூளைமேட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில் நுட்பச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகின் கருப்பு வியாபாரமான குழந்தைகள் குறித்த ஆபாசப் படங்களைப் பதிவேற்றுதல், பகிர்தல், அப்லோடு செய்தல் போன்ற குற்றங்கள் இந்தியாவில் அதிகமாக நடப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் நடப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவு கண்டுபிடித்து அதற்கான 5000 பக்கம் கொண்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியது. அந்த ஐபி முகவரிப் பட்டியலை மாவட்ட வாரியாகப் பிரித்து, சைபர் பிரிவு போலீஸ் துணையுடன் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் 30 பேரின் ஐபி முகவரி சென்னை போலீஸாருக்கு அனுப்பப்பட்டு அவர்களைக் கண்டறிந்து பிடிக்கும் முயற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்கள், பொதுவான ஆபாசப் படங்கள் வரும் தளங்களை மத்திய அரசு முடக்கியது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வலைதளங்களைப் பார்ப்பது, தரவிறக்கம் செய்வது, பகிர்வது குற்றச்செயல் ஆகும். இதுகுறித்துபெரிய அளவிலான விழிப்புணர்வை தமிழக போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாச வலைதளம் பக்கம் சென்றவர்களை போலீஸார் ஐபி முகவரி வைத்து தேடி வருகின்றனர்.

ஆபாச வலைதளங்கள் முடக்கப்பட்டாலும், காவல்துறை எச்சரித்தாலும், இதில் மோகம் கொண்டுள்ள பலரும் இதற்கென இருக்கும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆபாச வலைதளம் பக்கம் செல்கின்றனர்.

சென்னையில் ஐபி முகவரியை வைத்து போலீஸார் தேடிவரும் நிலையில், தானாக வந்து வலையில் சிக்கியுள்ளார் சூளைமேட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

கைதான மோகன்

சூளைமேட்டைச் சேர்ந்தவர் மோகன் (72). தனியார் வங்கியில் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மண்ணிவாக்கத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் தனது வீட்டில் உள்ள தனது ஐ-பாட் சிஸ்டத்தில் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்து பார்த்து வந்துள்ளார்.

டவுன்லோடு செய்து பார்த்ததும் அல்லாமல் தன் வீட்டுக்கு மனைவி மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் குடித்தனக்காரர்கள் சிலரை வற்புறுத்திப் பார்க்க வைத்துள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் 22 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீஸார் மோகன் தொடர்ந்து குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்த்ததைக் கண்டுபிடித்தனர்.

அவரைக் கைது செய்து அவர் மீது 354A (iii), 292A , 509 IPC r/w 67AB IT Act and 15 of POCSO போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, டவுன்லோடு செய்து பகிர்வது போன்றவை கடும் குற்றமாகும். இதைச் செய்த 30 பேரின் ஐபி முகவரியை வைத்து போலீஸார் தேடிவரும் நிலையில் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் முதியவர் மோகன் அதே செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். சென்னையில் இது முதல் கைது ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x