Published : 24 Dec 2019 01:30 PM
Last Updated : 24 Dec 2019 01:30 PM

சென்னையில் நள்ளிரவு சாலை விபத்துகளில்  3 பேர் உயிரிழப்பு

சென்னையில் அதிகாலையில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலானாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் இருசக்கர வாகனங்கள் நேரடியாக மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவரும், நசரத்பேட்டை அருகே சாலையோர கண்டெய்னர் லாரியில் மோதியதில் காரில் வந்த ஒருவரும், மதுரவாயல் பைபாஸ் சாலையில் சாலையைக் கடக்க முயன்றவர் வாகனம் மோதியும் உயிரிழந்தனர்.

விபத்து-1

வேலூரை அடுத்த திருப்பத்துரை சேர்ந்தவர் லோகநாதன் (61). இவரது மகன் சிவகுமார் (40). இவர்கள் சென்னை போரூரில் பானி பூரி கடை வைத்துள்ளனர். நேற்றிரவு கடையை மூடிவிட்டு, திருப்பத்தூருக்கு காரில் இருவரும் சென்றனர். காரை சிவக்குமார் ஓட்டி சென்றார்.

இரவு 12-00 மணி அளவில் பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்ற போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவக்குமார் படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்துடன் போராடிய சிவகுமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லோகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்து-2

குரோம்பேட்டை, 7 வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23), சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை பார்த்து வந்தார். இவரின் தந்தையும் கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் வளசரவாக்கத்திலிருந்து விருகம்பாக்கம் வழியாக வடபழனி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் கே.கே.நகர் 1வது செக்டாரில் வசிக்கும் தினேஷ் என்பவர் தனது நண்பர் பிரபு என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு 12 மணி அளவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகில் வரும்போது எதிரெதிர் திசையில் வேகமாக வந்து இருவரும் மோதிக்கொண்டனர்.

மணிகண்டன் ஹெல்மெட் அணியாமல் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது மணிகண்டன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவலின் பேரில் பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் மணிகண்டன் உடலைக் கைப்பற்று பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எதிரில் வந்து மோட்டார் சைக்கிளில் மோதிய தினேஷ் கைது செய்யப்பட்டார். ஹெல்மட் அணியாமலும், இருவருமே அதிக வேகத்தில் பயணித்து அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதுமே விபத்துக்கு காரணம் என போலீஸார் கருதுகின்றனர்.

விபத்து:3

பீர்க்கன்கரணையைச் சேர்ந்தவர் மணிமாறன் (46). இவர் நேற்றிரவு மதுரவாயல் பைபாஸ் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மணிமாறன் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x