Published : 21 Dec 2019 03:23 PM
Last Updated : 21 Dec 2019 03:23 PM

பாதுகாப்புக்கு ‘காவலன் செயலி’ : பூக்கடையில் இளம்பெண்ணைச் சீண்டிய இரண்டு இளைஞர்கள் சிக்கினர்

சென்னை

சென்னை பூக்கடையிலிருந்து கோயம்பேடு செல்லும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரைக் காவலன் செயலி உதவியால் போலீஸார் உடனடியாகச் சென்று பிடித்தனர்.

நேற்று மாலை 7.30 மணி அளவில் சென்னை பூக்கடையிலிருந்து கோயம்பேடு நோக்கி 15 G அரசுப் பேருந்து புறப்பட்டது. அதில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். சமீபகாலமாக போலீஸாரின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் காவலன் செயலியை இளம்பெண்கள் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்தில் பயணம் செய்த அந்த இளம்பெண்ணும் போலீஸாரின் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தால் காவலன் செயலியை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அப்போது பேருந்தில் ஏறிய 3 இளைஞர்களில் மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் தகராறு செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தன் செல்போனில் இருந்த காவலன் SOS செயலியில் உள்ள சிவப்பு பட்டனை அழுத்தியுள்ளார். உடனடியாக அந்தத் தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக பேருந்து நிற்கும் எல்லையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்திற்குத் தகவல் வர அங்கு ரோந்துப் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன் உடனடியாக போலீஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் தகராறு செய்த இரண்டு இளைஞர்களையும் உடன் வந்த மற்றொரு மாணவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு முடித்துப் பதிவு செய்ய வந்தவர்கள் எனத் தெரியவந்தது.

மதுபோதையில் தகராறு செய்ததாக இருவரையும் மருத்துவமனை அழைத்துச் சென்று, போதையில் இருந்த சான்று பெற்று ஸ்டேஷன் அழைத்து வந்தனர். மாணவர்கள் எதிர்காலம் கருதி அவர்கள் மீது சிறுவழக்கு போட்டு, ஸ்டேஷன் ஜாமீனில் அவர்களை எச்சரித்து விடுவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ''காவலன் செயலி மூலம் புகார் அளித்த பெண்ணின் புகார் கட்டுப்பாட்டறைக்குச் சென்றது. சில நிமிடங்களில் போலீஸ் வந்தது. புகார் அளித்தவரை நாங்கள் அடையாளம் காட்டவில்லை. அவர் செயலி பட்டனை அழுத்தி தகவலைச் சொன்னார். குற்றவாளிகள் சிக்கினர். புகார் அளித்தவர் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொண்டார். இனி இளம்பெண்களை யாரும் சீண்டவோ, தொந்தரவு செய்யவோ முடியாது. காவலன் செயலி அவர்களைப் பிடிக்க வைக்கும்’’ என்று தெரிவித்தனர

ஏற்கெனவே ஆர்.கே.நகரில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பூக்கடையில் இரண்டு மாணவர்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x