Published : 20 Dec 2019 11:27 AM
Last Updated : 20 Dec 2019 11:27 AM

வீட்டிலிருந்து ரூ.1 லட்சம் பணத்துடன் மாயமான மதுரை சிறுமிகள் மூவர் நாகையில் மீட்பு

மதுரையில் வீட்டிலிருந்து ரூ.1 லட்சம் பணத்துடன் மாயமான 3 சிறுமிகளும் நாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகள் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை
எடுத்துக்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) மாயமாகினர்.

வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள் கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர்.

அக்கடிதத்தில், "எங்களை யாரும் தேட வேண்டாம். எங்களைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்க வேண்டாம்" என்று எழுதியதாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் 3 தனிப்படை அமைத்தனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பும் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 சிறுமிகள் நாகப்பட்டினம் போலீஸார் பாதுகாப்பில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீஸார் நாகப்பட்டினம் போலீஸாருடன் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்கள் மூலம் அடையாளத்தை உறுதி செய்த பின்னர் மாணவிகள் மூவரும் நாகப்பட்டினம் எஸ்.பி. அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டனர்.

மதுரையில் இருந்து தனிப்படை போலீஸாரும், சிறுமிகளின் உறவினர்களும் நாகை விரைந்தனர்.

போலீஸ் விசாரணையில் மூன்று சிறுமிகளில் ஒருவரின் தாயார் நாகையில் இருப்பதாகவும் அவரைக் காண்பதற்காக தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தோழிகளையும் கூட்டிக் கொண்டு சிறுமி நாகைக்குச் சென்றதும் தெரியவந்தது.

தாயு, செந்தில்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x