Published : 19 Dec 2019 11:51 AM
Last Updated : 19 Dec 2019 11:51 AM

மனித வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு சோதனை

தலைமைச் செயலகத்தை மனித வெடிகுண்டால் தகர்ப்போம், ஓபிஎஸ், இபிஎஸ் வீட்டில் குண்டுவெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து தலைமைச் செயலகத்தில் கடும் சோதனை நடத்தப்படுகிறது. மோப்பநாய், வெடிகுண்டுண்டு நிபுணர்கள் இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுகவின் 11 மற்றும் பாமகவின் 1 உறுப்பினர் எண்ணிக்கை மசோதா நிறைவேற உதவியது. இதனால் அதிமுக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டறைக்கு செல்போன் எண்ணிலிருந்து ஒரு நபர் அழைத்தார். தன்னைப் பற்றிச் சொல்லாமல் கடகடவென்று பேச ஆரம்பித்த அந்த நபர், ''குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது. அதனால் தலைமைச் செயலகத்தை மனித வெடிகுண்டால் தகர்க்கப் போகிறோம். அடுத்து முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் குண்டு வெடிக்கும்'' எனப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக முதல்வர், துணை முதல்வர் இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நேற்றிரவு சோதனை நடத்தப்பட்டது.

இதேபோன்று தலைமைச் செயலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர் எச்சரித்ததால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் கோவையிலிருந்து பேசியது தெரியவந்ததை அடுத்து அவரது செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து கண்டுபிடிக்க கோவையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலையிலும் தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. தலைமைச் செயலகத்துக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், செய்தியாளர்கள் அனைவரும் சோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டனர்.

மேலும் தலைமைச் செயலகத்துக்குள் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக முக்கிய கட்டிடம், கேண்டீன், பொதுமக்கள் புகார் பிரிவு, நாமக்கல் கவிஞர் மாளிகை, கார் பார்க்கிங் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இதனால் தலைமைச் செயலகத்தில் காலைமுதலே ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x