Last Updated : 14 Dec, 2019 11:18 AM

 

Published : 14 Dec 2019 11:18 AM
Last Updated : 14 Dec 2019 11:18 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேர் கைது

விழுப்புரம் சம்பவத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கி கடன் சுமைக்கு ஆளான நகைத் தொழிலாளி, தனது 3 குழந்தைகளைக் கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அரிமளம் அருகே கே.செட்டிபட்டியைச் சேர்ந்த எ.கந்தவேலு (51), காரையூர் அருகே மேலத்தானியத்தைச் சேர்ந்த எஸ்.முபாரக் அலி (60), புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பீர்முகமது (28), கே.கார்த்திக் (28) மற்றும் ஆர்.அப்துல் மஜீத் ஆகிய 5 பேரையும் போலீஸார் இன்று (டிச.14) கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததற்கான பில் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையில் நெட்வொர்க்காக செயல்பட்டு வருவோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாவட்டத்தில் இதற்குப் பிறகும் லாட்டரி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி அருண்சக்தி குமார் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x