Published : 10 Dec 2019 09:31 PM
Last Updated : 10 Dec 2019 09:31 PM

ஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்

குழந்தைகளைக் காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் 3000 பேர் சிக்குகிறார்கள் என கூடுதல் டிஜிபி தெரிவித்திருந்த நிலையில், நெல்லையில் ஒரு இளைஞரை ஆபாசப்படம் பார்த்ததாக போலி போலீஸ் ஒருவர் மிரட்டினார். மிரட்டிய நபர் போலீஸாரிடம் சிக்கினார்.

ஆபாசப்படத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதுகுறித்து இணையத்தில் தேடுவதோ, டவுன்லோடு செய்வதோ, செல்போன், டெஸ்க் டாப்பில் சேமித்து வைப்பதோ சட்டப்படி குற்றம். இதற்கு போக்சோ சட்டம் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு.

இப்படிப்பட்ட சைட்டுக்கு சென்றவர்கள், படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் பட்டியலை அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் உள்ளவர்களை பட்டியல் எடுத்து குற்றத்தின் தன்மையை வகைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேச்சிமுத்து என்பவருக்கு போலீஸ் பேசுவதுபோன்று கால் ஒன்று வந்தது. பின்னணியில் வாக்கிடாக்கி சத்தத்துடன் போலீஸ் அதிகாரி ஒருவர் நான் எஸ்.ஐ.பேசுறேன் ஆபாசப்படம் பார்த்ததாக உன் செல்போன் ஐபி அட்ரஸும் சிக்கி இருக்கு என்று மிரட்டுவார்.

அந்த இளைஞர் முதலில் பயந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் படம் எல்லாம் பார்க்கலீங்க, வேண்டுமானால் என் செல்போனை பாருங்கள் என்பார்.

“எலேய், பார்காமலா லிஸ்ட்ல உன் பேர் வந்துருக்கு. இன்னார் மகன் தானே நீ உன் வீட்டுக்கு, உன் அப்பாவுக்கு லட்டர் வரும் ஸ்டேஷனுக்கு வா ” என மிரட்டுவார். இந்த ஆடியோ வைரலானதை அடுத்து தாங்கள் யாரையும் போனில் கூப்பிட்டு மிரட்டச் சொல்லவில்லை அது வழியும் அல்ல, சம்மன் மட்டுமே அனுப்புவோம் என உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

வாக்கி டாக்கி பின்னணியில் போலீஸ் எஸ்.ஐ.போல் பேசியவர் உண்மையிலேயே போலீஸ்தானா என மறுபக்கம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் போலீஸ்போல் மிரட்டியவர் உண்மையில் போலீஸ் அல்ல அவர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மூன்றடைப்பு போலீஸார் அவர் சென்னையில் இருப்பது தெரிந்து அவரைப்பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x