Published : 23 Nov 2019 08:51 PM
Last Updated : 23 Nov 2019 08:51 PM

ஆன்லைன் மூலம் உயர் ரக கஞ்சா; வெளிநாட்டில் இருந்து வரவழைத்த சென்னை இளைஞர் கைது: ரூ.20 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா பிடிபட்டது

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் என ஆன்லைன்மூலம் உயர் ரக கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்துவந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன.

அடிக்கடி இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத சில்வர் பேப்பர்கள் கொண்டு நாலாபுறமும் அடைக்கப்பட்டு அதன் வெளிப்புறத்தில் காபி பவுடரும் சேர்த்து பல அடுக்குகளில் சில்வர் காகிதங்கள் கொண்டு மிக நேர்த்தியாக பேக் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக இவ்வகையில் வரும் பார்சல்கள் என 4 கிலோ எடையுள்ள 31 பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதித்துள்ளனர். மேலடுக்கில் காபி பவுடர் இருந்த பார்சலை மொத்தமாகப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே காய்ந்த இலைகள் (உலர் கஞ்சா) இருந்தது தெரியவந்துள்ளது. அதை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி சோதித்தபோது அது கஞ்சா எனத் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம்.

இத்தகைய பார்சல்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ளன. அனுப்பியவர் முகவரியும் போலி, சென்னையில் அதைப் பெறும் நபரின் முகவரியும் போலி. ஆனால் அதை வாங்கி சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் பரமகுரு (28) என்ற இளைஞர்.

சமீபத்தில் 112 கிராம் உலர் கஞ்சா பார்சல் ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்தது. பார்சல்களை வாங்கும் நபரைப் பொறி வைத்துப்பிடிக்க, சந்தேகம் எழாத வண்ணம் விமான நிலைய வெளிநாடுகளுக்கான அஞ்சலக பார்சல் பிரிவினர் காத்திருந்தனர். அப்போது பார்சலை வாங்க வந்த பரமகுரு சிக்கினார். அதன் மதிப்பு ரூ.42,000 ஆகும்.

பரமகுரு கடந்த 3 மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து கஞ்சா வரவழைத்துள்ளதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். இதற்கான பரிவர்த்தனை முழுவதும் பிட்காயின் மூலம் பரமகுரு செலுத்தியுள்ளார். பரமகுருவுடன் சோ்ந்து மேலும் பலா் சென்னையில் இத்தொழிலில் ஈடுப்பட்டிருக்கலாம் என போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக பரமகுருவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமகுருவை (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) போதைப்பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கும் பொருட்களை வைத்திருப்பது/பயன்படுத்துவதற்கு எதிரான குற்றத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதில் ஒரு கிலோ கையிருப்பு வைத்திருந்தால் 1 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x