Published : 15 Nov 2019 05:31 PM
Last Updated : 15 Nov 2019 05:31 PM

மகளை அடித்துத் துன்புறுத்திய தந்தை: மதுரையில் கொடூரம்; பொதுமக்கள் புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை

மதுரை

மதுரையில் பெற்ற மகளையே மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத் தெருவில் வசித்து வரும் தம்பதி அப்துல்சமது - மும்தாஜ் இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அப்துல் சமது ஒரு கூலித் தொழிலாளி.

ஆனால், குடிநோயாளியான இவர் ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. இதனால் குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது.

அண்மையில் மனைவியை நடுத்தெருவில் வைத்து அப்துல்சமது சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால் அவர் உறவினர் வீட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார். ஆனால், மகள்களை மட்டும் அப்துல்சமது தன்னுடனேயே வைத்துள்ளார்.

இந்நிலையில், 9 வயதான மூத்த மகள், நேற்று மாலை பள்ளி முடிந்து திரும்பும் வழியில் தனது தாயாரைப் பார்த்து விட்டு திரும்பியுள்ளார். இந்த விஷயம் அப்துல் சமதுக்கு தெரிந்துவிடவே அவர் மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அவரை அந்தத் தெருவில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றும் எதுவும் முடியவில்லை. ஒருகட்டத்தில், பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அப்துல்சமது தனது மகளைத் தாக்கிய காட்சிகள் அத்தெருவிலிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் காண்போரின் மனதைக் கலங்கவைக்கும் வகையில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x