Last Updated : 18 Oct, 2019 03:12 PM

 

Published : 18 Oct 2019 03:12 PM
Last Updated : 18 Oct 2019 03:12 PM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடன் தொல்லையால் தற்கொலை

விழுப்புரம்

ஆரோவில் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானூர் அருகே ஆரோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவருடைய மனைவி மகேஸ்வரி (35). இவர்கள் இருவரும் ஆரோவில் பகுதியில் உள்ள சர்வதேச நகரில் வேலை செய்து வந்தார்கள். இத்தம்பதிக்கு கிருத்திகா, ஷமிஷா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆரோவில் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 10-ம் வகுப்பும், 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த 3 நாட்களாக இவர்கள் வீடு பூட்டிக் கிடந்தது. இன்று (அக்.18) காலை இந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஆரோவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது சுந்தரமூர்த்தி தூக்கிட்டும், மகேஸ்வரி மற்றும் கிருத்திகா, ஷமிஷா ஆகிய 3 பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடல் சிதைந்த நிலையில் இருந்த 4 பேரின் உடலை மீட்ட போலீஸார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குயிலாப்பாலையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் உறவினர் ஜெயமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சுந்தரமூர்த்தி ஆண்டுதோறும் தீபாவளி சீட்டு பிடிப்பது வழக்கம். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு பணம் திருப்பித் தர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடன் தொல்லை அதிகமானதால் சில நாட்களுக்கு முன் சுந்தரமூர்த்தி உணவில் விஷம் கலந்து மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார். அவர்கள் இறந்ததை உறுதி செய்து கொண்ட பின்னர் மனைவியின் சேலையில் சுந்தரமூர்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x