Published : 14 Oct 2019 05:21 PM
Last Updated : 14 Oct 2019 05:21 PM

குறுகிய இடைவெளியில் முந்த முயன்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாநகரப் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு 

சென்னை

சென்னை வடபழனியில் மாநகரப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற நபர், குறுகிய இடைவெளி காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (52). இவர் சுயதொழில் செய்து வந்தார். இன்று மதியம் தொழில் நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் வடபழனியிலிருந்து அசோக் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வடபழனி பாலத்திற்குக் கீழே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்புறம் மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தை மகேந்திரன் முந்திச் செல்ல முயன்றார். அந்த சாலை குறுகிய சாலை. சாலையின் இடையே கோயில் சுவர் இருந்தது. மகேந்திரனுக்கும் பேருந்துக்கும் கோயில் சுவருக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்ததால், நிலை தடுமாறிய அவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது அவரது இருசக்கர வாகனம் சுவரில் மோத நிலை தடுமாறிய மகேந்திரன், வலதுபுறமாக பேருந்தின்மீது விழ கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது பின் சக்கரம் ஏறி இறங்க, சம்பவ இடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்தார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.

ஒரு நிமிடம் மகேந்திரன் நிதானித்து வந்திருந்தால் சாலை அகலமாக இருக்கும் இடத்தில் அவர் எளிதாக பேருந்தைக் கடந்து சென்றிருக்கலாம். குறுகிய சாலையின் தன்மையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் வருவதைக் கவனித்து நிதானமாக பேருந்தை இயக்கியிருந்தால், மகேந்திரன் தடுமாறி விழ வாய்ப்பு இருந்திருக்காது. இரண்டு பக்கமும் சில நொடி நேரத்தில் செய்த தவறால் அநியாயமாக ஒரு உயிர் பலியானது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாநகரப் பேருந்து ஓட்டுநர் கருப்பையாவைக் கைது செய்தனர். நடத்துநர் ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x