Published : 12 Oct 2019 06:00 PM
Last Updated : 12 Oct 2019 06:00 PM

பாலக்கோடு அருகே காட்டுப்பன்றி எனக் கருதி ஓட்டுநரை சுட்டுக் கொன்ற சம்பவம்: 2 பேர் கைது

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டுப்பன்றி எனக் கருதி ஓட்டுநரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாலக்கோடு வட்டம் மாரண்ட அள்ளி அருகிலுள்ள உலகன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் ஓட்டுநர் ஆறுமுகம் (37). இவர், கடந்த 8-ம் தேதி சிக்கமாரண்ட அள்ளி அருகே ரயில் பாதையில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அருகில், அவரது இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது. தருமபுரி ரயில்வே போலீஸார் அவரது உடலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோதனையில், அவரது உடலில் துப்பாக்கிக் குண்டின் உலோக துணுக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அப்பகுதியில் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வேறு இடத்தில் ஆறுமுகத்தைக் கொலை செய்து எடுத்து வந்து ரயில் பாதையில் வீசிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே, சுற்று வட்டாரப் பகுதி விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தொடர் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதில், அருகிலுள்ள சண்முகம் என்ற விவசாயியின் நிலத்தில் ரத்தம் பட்டு காய்ந்த சுவடுகள் கண்டறியப்பட்டன. நிலத்தின் உரிமையாளர் சண்முகத்திடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் ஆறுமுகத்தை சுட்டுக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.

மேலும், "நிலக்கடலை வயலில் இரவில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. நிலக்கடலையைக் காக்க துப்பாக்கியால் சுட்டு அவற்றை விரட்டும் பணியில் இரவில் ஈடுபடுவோம். சம்பவத்தன்று நிலக்கடலை வயலில் அசைவுகள் தெரிந்தன. பன்றிகள் நடமாடுவதாக கருதி துப்பாக்கியால் சுட்டேன். அப்போது அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியுடன் அருகில் சென்று பார்த்தபோது ஆறுமுகம் தலைப்பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கிடந்தார். அவர் அருகே உள்ளூரைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி ராதா (36) என்பவரும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்களுடன் கிடந்தார். சற்று நேரத்தில் ஆறுமுகம் உயிரிழந்தார்.

அவர்களை காட்டுப்பன்றிகள் எனக் கருதி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுவிட்டேன். இந்தச் சம்பவத்தில் இருந்து தப்பத் திட்டமிட்டு ராதாவிடம் பேசி முடிவெடுத்தேன். பின்னர் உறவினர் சின்னசாமி என்பவர் உதவியுடன் ஆறுமுகத்தின் உடலை ரயில் பாதையில் வீசிச் சென்றேன். காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற ராதா மறுநாள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்து பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்'' என விசாரணையில் சண்முகம் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சண்முகம், சின்னசாமி ஆகிய இருவரையும் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். சிகிச்சையில் உள்ள ராதாவை, குணமடைந்த பின்னர் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்தக் கொலை வழக்கு மாரண்டஅள்ளி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x