Published : 11 Oct 2019 09:40 PM
Last Updated : 11 Oct 2019 09:40 PM

பெண் மருத்துவரிடம் வழிப்பறி: பைக் கவிழ்ந்ததால் வசமாகச் சிக்கிய கொள்ளையர்கள் 

சென்னை

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரிடம் வழிப்பறி செய்த 4 கொள்ளையர்கள் தப்பித்து செல்லும்போது பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர் ரித்து. மருத்துவரான இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். நேற்றிரவு உணவு அருந்துவதற்காக கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர் மருத்துவர் ரித்துவின் கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்பினர். கைப்பையில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவை இருந்தன. கொள்ளையர்கள் கைப்பையைப் பறித்துச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரித்து கூச்சலிட்டார்.

இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர். பொதுமக்களிடம் சிக்காமல் இருக்கக் கொள்ளையர்கள் தங்கள் பைக்கில் பூந்தமல்லி சாலை வழியாகத் தப்பித்துச் சென்றனர். அப்போது கொள்ளையர்களின் ஒரு பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. ஓட்டிச் சென்ற நபரும் உடன் சென்றவரும் கீழே விழுந்தனர்.

மற்றொரு பைக்கில் வந்தவர்கள் தப்பித்துச் சென்றனர். கீழே விழுந்தவர்களைப் பொதுமக்கள் பிடித்து அவர்களுக்குத் தர்ம அடிகொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அயனாவரத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் அஜய்(20), பிளம்பர் வேலை செய்யும், ஹரிஷ் குமார் (18) , அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அயனாவரத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக்கான பாலி என்கிற அஜித் குமார் (22),, சூளைமேட்டைச் சேர்ந்த சிவா (20) ஆகிய இரு கொள்ளையர்களையும் கீழ்பாக்கம் போலீஸார் இரவோடு இரவாகக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கைப்பை, பணம், செல்போன், வழிப்பறிக்கு பயன்படுத்திய அப்பாச்சி, டியோ பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x