

என். மகேஷ்குமார்
திருப்பதி
திருமலை வனப் பகுதியில் இருந்து செம்மரங் களை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேரை நேற்று அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
திருமலை வனப்பகுதியில் இருந்து சிலர் செம்மரங்களை வெட்டி சென்னைக்கு காரில் கடத்துவதாக திருப்பதி அதிரடிப் படையினருக்கு புதன்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அலிபிரி அருகே இரவு முழுவதும் வாகன சோதனையில் அதிரடிப் படையினர் ஈடுபட்டனர்.
அப்போது விஜயதசமிக்கான பூஜை செய்யப் பட்டது போன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கார் அலிபிரி நோக்கி வேகமாக வந்தது. அந்த காரை அதிரடிப் படையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 13 செம்மரங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் வந்த தருமபுரியை சேர்ந்த முருகேசன் ஜெயபால் (25), ராமலிங்கம் அருணாசலம் (30), பூபால் கந்தசாமி (27), கார் ஓட்டுநர் பெருமாள் வேலு (35) ஆகிய 4 பேரை அதிரடிப் படையினர் கைது செய்தனர். இதே வாகனத்தில் இந்தக் கும்பல் 5-வது முறையாக செம்மரம் கடத்தும் போது அதிரடிப் படையிடம் சிக்கினர்.