Published : 04 Oct 2019 01:23 PM
Last Updated : 04 Oct 2019 01:23 PM

பேருந்தின் மீது மோதிய 108 ஆம்புலன்ஸ்; ஓட்டுநர், நோயாளி பலி: மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றபோது பரிதாபம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க அவசரமாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ், முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், நோயாளியும் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள்(75) நெஞ்சுவலியால் துடித்தார். உடனடியாக அவரது மகள் சரஸ்வதி 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் மருத்துவ உதவியாளர் தினகரன் சென்றார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு விரைந்து சென்றுகொண்டிருந்தார். ஆத்தூர் என்ற பகுதி அருகே வேன் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற தனியார் பேருந்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார் முந்த முயன்றுள்ளார்.

ஆம்புலன்ஸின் சத்தம் கேட்டு பேருந்து ஓட்டுநர் வழிவிட, இடது பக்கம் ஓரமாக ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பேருந்து சாலையின் வலப்புறம் செல்வதால் சைரன் போட்டபடி இடதுபுறமாக முந்திவிடலாம் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முயன்றதாகக் கூறப்படுகிறது. பேருந்து வழிவிட, திடீரென இடதுபுறம் ஒதுங்கியதால் 108 ஆம்புலன்ஸை ஓட்டுநர் ஜெயக்குமாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இதில் தனியார் பேருந்தின் பின்புறம் ஆம்புலன்ஸ் வேகமாக மோதியது. இதில் ஆம்புலன்ஸின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார் உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி கன்னியம்மாள் (75) , அவரது மகள் சரஸ்வதி, மருத்துவ உதவியாளர் தினகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் சாலையோரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு பாலூர் போலீஸார், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றனர்.

ஆம்புலன்ஸ் வேனுக்குள் சிக்கிய ஜெயக்குமாரின் உடலை சிரமப்பட்டு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே நோயாளி கன்னியம்மாள் உயிரிழந்தார் . படுகாயமடைந்த அவருடைய மகள் சரஸ்வதி மற்றும் மருத்துவ உதவியாளர் தினகரன் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாலூர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேக் ஃபெயிலியர் பிரச்சினை உள்ளதால் அவ்வப்போது பிரேக் பிடிக்கவில்லை என நிர்வாகத்திடம் ஓட்டுநர் புகார் அளித்த தகவல் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் சிக்கி ஓட்டுநரும் நோயாளியும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x