Published : 30 Sep 2019 03:42 PM
Last Updated : 30 Sep 2019 03:42 PM

பயணச்சீட்டு கேட்ட நடத்துநர் மீது ஓடும் பேருந்தில் தாக்கு: 2 காவலர்கள் கைது

நெல்லை

அரசுப் பேருந்தில் 2 ஆயுதப்படைக் காவலர்கள் கட்டணமின்றிப் பயணம் செய்தனர். உரிய ஆவணம் இல்லாததால் அதுகுறித்துக் கேட்ட நடத்துநரைத் தாக்கி ரத்த காயம் விளைவித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குமிழியிலிருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து நேற்று சென்றது. மாலை 4 மணியளவில் திருநெல்வேலியிலிருந்து சீருடை அணிந்த இரண்டு காவலர்கள் அப்பேருந்தில் ஏறியுள்ளனர். மூன்றடைப்பு அருகே பேருந்து வரும்போது பேருந்து நடத்துநர் ரமேஷ் டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் தாங்கள் போலீஸ் எனக் கூறியுள்ளனர். போலீஸ் என்றால் வாரண்ட் காப்பியைக் காண்பிக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார்.

வாரண்ட் காப்பி என்பது ஒரு பணி நிமித்தமாக காவலர்கள் பேருந்தைப் பயன்படுத்தும் நேரத்தில் அவர்கள் சொந்தப் பணத்தைச் செலுத்தாமல் காவல் துறை செலுத்துவதற்காக அளிக்கப்படும் அத்தாட்சி சீட்டு, பின்னர் காவல்துறை இதற்குரிய தொகையை வழங்கிவிடும்.

சில நேரங்களில் போலீஸார் தங்கள் கையைத் தூக்கி நடத்துநருக்குக் குறிப்பால் உணர்த்துவார்கள். நடத்துநர்களும் விட்டுவிடுவார்கள். ஆனால், செக்கிங் வந்தால் பயணச்சீட்டு தராமல் அனுமதித்தால் நடத்துநர் மீது நடவடிக்கை பாயும்.

இந்நிலையில் நடத்துநர ரமேஷ் வாரண்ட் காப்பி கேட்டபோது காவலர்கள் அதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருந்தனர். மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த பின்னர் நடத்துநர் ரமேஷ் மீண்டும் அவர்களிடம் ஒன்று டிக்கெட் வாங்குங்கள் அல்லது வாரண்ட் காப்பி இருந்தால் காட்டுங்கள் எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைப் பேருந்தில் அமர்ந்திருந்த பயணி தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்தப் பதிவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது. அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காவலர்கள் இருவரும் நடத்துநரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

இந்தத் தாக்குதலில் நடத்துநர் ரமேஷ் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்த பயணிகள் நடத்துநருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அவர் கேட்கும் ஆவணத்தைக் காண்பியுங்கள், அதை விட்டுவிட்டு அவரை எப்படி தாக்கலாம் என கேட்டு பேருந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடச் சொன்ன காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன.

ஓட்டுநர் அந்தப் பேருந்தை அருகிலிருந்த மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று அங்குள்ள போலீஸாரிடம் நடந்த விஷயங்களைக் கூற போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு காவலர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்தக் காவலர்கள் இருவரும் நெல்லை ஆயுதப்படையைச் சேர்ந்த மகேஷ் மற்றும் தமிழரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் உத்தரவுப்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இருவரையும் போலீஸர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

கடந்த 3-ம் தேதி திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில் விருத்தாசலம் அருகே திட்டக்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். அவர் நடத்துநர் கோபிநாத்துடன் வாக்குவாதம் செய்ய அதில் மாரடைப்பால் நடத்துநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x