காரைக்குடியில் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது

காரைக்குடியில் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது
Updated on
1 min read

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் மணிமுத்து(51). இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூமதி (46). மகள் பவீனா(21), மகன்கள் சாமுவேல்(19), சஞ்சை அர விந்த்(17). சில மாதங்களுக்கு முன் பூமதி தனது மகள், மகன்களுடன் காரைக்குடி தந்தை பெரியார் 4-வது வீதியில் வாடகை வீட்டில் குடியேறினார்.

கணவர் கொலை

மணிமுத்து வெளிநாட்டில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டின் மொட்டை மாடியில் கத்திக் குத்து காயங்களுடன் மணிமுத்து நேற்று இறந்துகிடந்தார். காரைக் குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அவரது மனைவி பூமதியிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.

சாமியார் தலைமறைவு

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது அவரும், சாமியார் வேல்முருகனும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பூமதியை போலீஸார் கைது செய்தனர். சாமியாரை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த சாமியாரான வேல்முருகன் கானாடுகாத்தானில் தங்கி குறி சொல்லி வந்தார். குறி கேட்கச் சென்ற பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 15 ஆண்டுகளாக இந்த பழக்கம் தொடர்ந்துள்ளது.

மணிமுத்து 20 ஆண்டுகளாக கத்தார் நாட்டிலேயே பணிபுரிந்த தால், அவர்களது பழக்கத்துக்கு இடையூறு ஏற்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கானாடு காத்தானில் இருந்த பூமதி குடும்பத்தை காரைக்குடியில் சாமி யார் குடியமர்த்தினார்.

இந்நிலையில் ஊருக்குத் திரும்பிய மணிமுத்து, சாமி யாருடன் பேசக் கூடாது என பூமதியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூமதியும், சாமியாரும் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு மணிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in