காரைக்குடி காப்பகத்தில் தங்கியிருந்த டிக்-டாக் பெண் மீண்டும் மாயமானார்

காரைக்குடி காப்பகத்தில் தங்கியிருந்த டிக்-டாக் பெண் மீண்டும் மாயமானார்
Updated on
1 min read

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காப்பகத்தில் தங்கியிருந்த டிக்- டாக் பெண் மீண்டும் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேவகோட்டை அருகே கடம்பா குடியைச் சேர்ந்த வினிதாவுக்கும், சானா ஊருணி ஆரோக்கிய லியோவுக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. இருவரும் காளையார்கோவிலில் வசித்தனர். மார்ச்சில் ஆரோக் கியலியோ சிங்கப்பூர் சென்றார். அதன்பின் வினிதா ‘டிக்டாக்’ செயலி மூலம் திரு வாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகினார். இதை ஆரோக்கியலியோ போனில் கண்டித்துள்ளார். அதை கேட்காததால் ஊருக்கு திரும்பிய ஆரோக்கியலியோ, அபியுடன் பேசக் கூடாது என வினிதாவை கண்டித்துள்ளார். அதேபோல அவரது தாயாரும் வினிதாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வினிதா மாயமானார். இதையடுத்து ‘வினிதா அவரது அக்கா புனிதாவின் 25 சவரன் நகைகளை எடுத்து கொண்டு அபியுடன் சென்றுவிட்டதாக’ வினிதாவின் தாயாரும், கணவரும் திருவேகம்பத்தூர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் செப்.24-ம் தேதி வினிதா சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் ஆஜரா னார். மேலும் தனது கணவர் கொடுமைப்படுத்தியதால் வெளியேறினேன். நகைகளை எடுத்துச் செல்லவில்லை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து போலீஸார் விசாரித் ததில் அபியிடம் நகைகளை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வினிதாவுடன் அபியைத் தேடி திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு அபி இல்லாததால் நேற்று முன்தினம் காரைக்குடி காப்பகத்தில் வினிதாவை போலீஸார் தங்க வைத்தனர். ஆனால், காவலாளி இல்லாத நேரத்தில் வினிதா மாயமானார். மேலும் வினிதா தனது செல்போனையும், ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றதாக பெண் வார்டன் போலீஸில் புகார் அளித்துள்ளார். வினிதாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in