Last Updated : 27 Sep, 2019 03:02 PM

 

Published : 27 Sep 2019 03:02 PM
Last Updated : 27 Sep 2019 03:02 PM

சிறையில் கைதிகளுக்கு கஞ்சா: காவலர் பணியிடை நீக்கம்

கோவை

1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறையில், கஞ்சா கடத்திய சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்குள் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை குறித்து அறிய சிறைத்துறை அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக கோவை சிறைக்குள் சோதனை நடத்தினர். இதில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் இருந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இந்த செல்போன்களை யார் பயன்படுத்தினர், யாருடன் பேசியுள்ளனர் என்பது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் பணியாற்றி வந்த 2-ம் நிலைக் காவலர் அந்தஸ்திலான சிறைக் காவலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தண்டனைக் கைதிகளுக்குக் கொடுப்பதற்காக சில தினங்களுக்கு முன், சிறை வளாகத்துக்குள் கஞ்சா கடத்திச் சென்றுள்ளார்.

சிறைக் காவலர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும் போது, 'கிருஷ்ணமூர்த்தி விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. தவிர, சிறை வளாகத்தில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.

கோவை மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x