Published : 26 Sep 2019 05:47 PM
Last Updated : 26 Sep 2019 05:47 PM

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பேனர் வைக்க அனுமதித்த பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த கொலை விவகாரத்திலும் அலட்சியம் காட்டிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

கடுமையான கண்டனத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

"அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்?’’ என்று கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இது குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ''எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலகத்தை மட்டும்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை. நாங்களே எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை நாங்கள் ஏற்று நடத்த முடியாது.

மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.

இந்நிலையில் பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை துணை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகு மீது 3.பி சார்ஜ் எனப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3.பி சார்ஜ்

3.பி சார்ஜ் காவல் அதிகாரி ஒருவருக்குக் கொடுக்கப்பட்டால் அவர் அந்த 3.பி சார்ஜ் நீக்கப்படும்வரை அதே பதவியில்தான் தொடரவேண்டும். பதவி உயர்வு என்பதே கிடையாது.

3.பி சார்ஜை நீக்கும் அதிகாரம் முதல்வர், உள்துறைச் செயலர், டிஜிபி மூவருக்கு மட்டுமே உண்டு. அவ்வளவு எளிதில் 3.பி சார்ஜை நீக்கி விட முடியாது. கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள், கடமையை மறந்து துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளுக்கு 3.பி சார்ஜ் கொடுக்கப்படும். காவல்துறையில் மிக சீரியஸாகப் பார்க்கப்படும் நடவடிக்கை இதுவாகும்.

பள்ளிக்கரணை ஆய்வாளருக்கு 3.பி சார்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில் பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் இல்லை. இதேபோன்று சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, லாசர் தெருவில் வசித்த தமிழ் (எ) தமிழரசன் என்ற பெயிண்டரை 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

அவர் தாக்கப்பட வாய்ப்புள்ளதாக சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் முருகேசனுக்கு எச்சரிக்கை விடப்பட்டும், கொலை செய்யப்பட்டவர் முன்பே புகார் அளித்தும் அவர் எதிர்த்தரப்பினரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல், கொலை செய்யப்பட்ட நபரைக் காக்கும் நடவடிக்கையில் தவறிவிட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் 3.ஏ சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

3.ஏ சார்ஜ் கொடுக்கப்பட்ட நபருக்கு பதவி உயர்வு பாதிக்கும். ஆனால், அது தற்காலிகமான ஒன்றாக இருக்கும். நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரி மேலதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டு விலக்கு பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x