Published : 23 Sep 2019 12:26 PM
Last Updated : 23 Sep 2019 12:26 PM

சென்னையின் இருவேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர், பெயிண்டர் வெட்டிக்கொலை 

சென்னை

சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வியாசர்பாடியில் இரண்டு சம்பவங்களில் ஆட்டோ ஓட்டுநர், பெயிண்டர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியில் வசிப்பவர் மோகன் (53). இவரது மகன் ஜெகன் (25). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார் . நேற்று இரவு 9 மணியளவில் பணி முடிந்தபின் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 68-வது பகுதி வழியாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெகனை வழிமறித்துச் சரமாரியாக வெட்டியது. இதில் தப்பி ஓட முயன்ற அவரை விடாமல் வெட்டினர். முகம், கழுத்து, கைகள் என வெட்டுப்பட்ட ஜெகன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி. நகர் போலீஸார் உயிருக்குப் போராடிய ஜெகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.

இதில், கடந்த ஜூலை மாதம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஜெகன் வெட்டியுள்ளார். இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆகவே இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலை என்கிற கோணத்தில் பெண் மீன் வியாபாரி உள்ளிட்டோரிடம் எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை, லாசர் தெருவில் வசித்த தமிழ் (எ) தமிழரசன் என்ற பெயிண்டரை 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த தமிழரசனை அக்கும்பல் விடாமல் துரத்தி வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதைப் பார்த்த தமிழரசனின் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவத்துக்கு பழிக்குப் பழிவாங்க இந்தக் கொலை நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x