Published : 23 Sep 2019 11:32 AM
Last Updated : 23 Sep 2019 11:32 AM

திருவல்லிக்கேணி ரவுடி அறிவழகன் கொலை வழக்கில் 3 பேர் கைது

சென்னை

திருவல்லிக்கேணியில் ரவுடி அறிவழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரியலூரில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவரது மகன் அரி (எ) அறிவழகன் (24) . இவர் வேலை எதுவும் செய்யாமல் அப்பகுதியில் ரவுடியாய் வலம் வந்துள்ளார். அறிவழகன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் சரித்திரப் பேரேடு குற்றவாளிகள் பட்டியலில் இவர் பெயர் இருந்தது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறிவழகனை திடீரென ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தலையில் சரமாரியாக வெட்டிய அக்கும்பல் அவர் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

அறிவழகன் கொலை குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட அறிவழகன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி பல்பு குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தக் கொலை தொடர்பாக பாலாஜி, வினோத் மற்றும் அவர்களுக்கு உதவிய சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை அரியலூரில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கைதான இருவரும் முன்னர் கொலை செய்யப்பட்ட பல்பு குமாரின் கூட்டாளிகள் என்பதும், சுரேஷ் என்பவர் அவர்களுக்கு உதவிய நபர் என்பதும் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x