Published : 20 Sep 2019 11:47 AM
Last Updated : 20 Sep 2019 11:47 AM

வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப் பதிவு

சென்னை

வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும் அவரது சகோதரர் மீதும் பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீட்டு வேலை செய்த சிறுமியை அடித்துச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது அச்சிறுமியின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ஆந்திர போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமி நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் செல்போனைத் திருடியதாக நடிகை பானுப்பிரியா கடந்த பிப்ரவரி மாதம் பாண்டி பஜார் போலீஸில் எதிர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த சிறுமி மற்றும் அவரது தாயை போலீஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தனது மகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் தனது மகளை சித்திரவதை செய்ததாக சிறுமியின் தாயார் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் பானுப்பிரியா மற்றும் அவர் சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பேனுபுகல பிரபாவதி (35) என்பவர் தனது மகள் கடந்த ஒரு வருட காலமாக (24.01.2019 வரை) நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அங்கு தன்னுடைய மகளை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாகவும் கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

அவரது புகாரின் பேரில் கிழக்கு கோதாவரி மாவட்டம் சமன்கோட்டா போலீஸார் ஐபிசி பிரிவு 323 (காயம் ஏற்படுத்துதல்), 506 (கொலை மிரட்டல்), 341 (அடைத்து வைத்து கட்டுப்படுத்துதல்), r/w 34 IPC and 75,79 JJA Act (சிறார் நீதி குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் தமிழ்நாடு, சென்னை, பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில் வருவதால் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டி, பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு தபால் மூலம் புகாரை அனுப்பி இருந்தனர்.

இதை அடுத்து காவல் உயர் அதிகாரிகளிடம் பாண்டி பஜார் போலீஸார் ஆலோசனை பெற்று பானுப்பிரியா மற்றும் கோபால கிருஷ்ணன் மீது 323, 506, 341, r/w 34 IPC and 75,79 JJA Act. (Juvenile Justice (care and protection of child) Act-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் பானுப்பிரியா கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x