Published : 20 Sep 2019 10:49 AM
Last Updated : 20 Sep 2019 10:49 AM

திருவல்லிக்கேணியில் ரவுடி வெட்டிக் கொலை: பழிக்குப்பழியாக கொலை நடந்ததா?- போலீஸ் விசாரணை

சென்னை

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது ஒரு கும்பல். பழிக்குப்பழி வாங்க கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவரது மகன் அரி (எ) அறிவழகன் (24) . இவர் வேலை எதுவும் செய்யாமல் அப்பகுதியில் ரவுடியாய் வலம் வந்துள்ளார். அறிவழகன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் சரித்திரப் பேரேடு குற்றவாளிகள் பட்டியலில் இவர் பெயரை போலீஸார் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அறிவழகன் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் ஒரு மர்ம கும்பல் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்து சுற்றி வளைத்தது. வீடு சிறியது என்பதால் அறிவழகனால் ஓடித் தப்பிக்க முடியவில்லை.

வீட்டிற்குள் நுழைந்த கும்பல் அறிவழகனைச் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தலையில் சரமாரியாக வெட்டிய அக்கும்பல் அவர் உயிரிழந்ததை உறுதிச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

உடனடியாக அறிவழகனின் உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிச் சென்று பார்த்தபோது அறிவழகன் கோரமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அறிவழகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட அறிவழகன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி பல்பு குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x