Published : 10 Sep 2019 05:07 PM
Last Updated : 10 Sep 2019 05:07 PM

சொத்து எழுதிவைக்காத கணவரை எரித்து கொன்ற மனைவி: நெல்லையில் கொடூரம்

வள்ளியூர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (59). இவரது மனைவி மரிய லீலா. இவர்களுக்கு, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் டெய்லராக வேலை பார்த்து வந்த பாக்கியராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பி வந்தார்.

இந்நிலையில், பாக்கியராஜுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனது சொத்துகளை மகன்கள் விக்டர், ரிச்சர்டு ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்து, நிலங்களை அளப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கு அவரது மனைவி மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவில் பாக்கியராஜ் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவர் மீது மரியலீலா மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அவரது மகன்களும், அருகில் உள்ளவர்களும் விரைந்து வந்து, பாக்கியராஜை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மரிய லீலாவை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x