Published : 07 Sep 2019 05:27 PM
Last Updated : 07 Sep 2019 05:27 PM

ஹெல்மெட் அணியாமல் சிக்கினால் ரூ.1000 அபராதத்துடன் இலவச ஹெல்மெட்; ராஜஸ்தான் அரசு முடிவு: தமிழகமும் பின்பற்றுமா?

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலானதை அடுத்து ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் மற்றும் இலவசமாக ஒரு ஹெல்மெட்டை வழங்க ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதில் காவல்துறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் சற்று மெத்தனமாக இருந்தது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்த போதும், அதை அமல்படுத்த 12 ஆண்டுகள் ஆகியிருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது குறித்து வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஹெல்மட் அணியாதவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

தற்போது ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதிமுதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் மோட்டார் வாகன விதிமீறல்களுக்கான அபராதம் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய அபராத முறை டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையே சாக்காக வைத்து டெல்லி, ஹரியாணா மாநிலங்களில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.22,000, ரூ.35,000 என அபராதம் விதித்து வருகின்றனர். இது இந்தியா முழுவதும் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய சட்டம் அமலானால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் அரசுகளுக்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

புதிய சட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் பொதுமக்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என பல மாநில அரசுகள் கருதுகின்றன. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் குறித்து இன்னும் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. எப்போது பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு இந்த விவகாரத்தில் ஒரு புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. அதாவது புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000 அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கு இலவசமாக ஐஎஸ்ஐ தரத்துடன் கூடிய ஹெல்மெட்டை வழங்க முடிவு செய்துள்ளது.

இதனால் தான் ஹெல்மெட் அணியாமல் சென்றது தவறு என உணரும் வாகன ஓட்டி, புதிய ஹெல்மெட்டைக் கட்டாயம் அணிய முயல்வார். இதன்மூலம் படிப்படியாக அனைவரும் ஹெல்மெட் அணிவார்கள் என்று அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியாவாஸ் கூறுகையில், “மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு ராஜஸ்தானில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், சட்டத்தை மீறுபவர்களுக்கு, கடுமையான அபராதங்களைச் செயல்படுத்த முடியாது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் செலுத்துபவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மக்களைக் கசக்கிப் பிழியாமல் சட்டத்தை அமல்படுத்தி அவர்களைப் பின்பற்றவைக்கும் நடைமுறையை ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்தி இருப்பது வரவேற்பைப் பெற்று வருகிறது. இதே நடைமுறையை தமிழகமும் பின்பற்றினால் அது சிறந்த ஒன்றாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x