Published : 07 Sep 2019 10:21 AM
Last Updated : 07 Sep 2019 10:21 AM

கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பர்கள் கைது

சேலம்

சேலம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம், தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திலீப்குமார் (19 ), ராசிபுரம் ஆண்டகலூர்கேட் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் சூர்யா . நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதை அடுத்து, இந்தாண்டு, திலீப்குமார் தனியாகவும், திருநாவுக்கரசு சரவணன், சூர்யா தனியாகவும் விநாயகர் சிலை வைத்தனர். கடந்த 4-ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது திலீப்குமார் ஆடிப்பாடியபடி சென்றபோது, திருநாவுக்கரசு சரவணன், சூர்யாவை பார்த்து கிண்டல் செய்ததாக தெரிகிறது.

அப்போது, ஆத்திரமடைந்த மூவரும் திலீப்குமாரை தாக்க முயன்றனர். அங்கிருந்த மக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். நேற்று முன் தினம் நள்ளிரவு திலீப்குமார் அவரது வீட்டருகே இருந்த போது, திருநாவுக்கரசு, சரவணன் ,சூர்யா மூவரும் வந்து தகராறு செய்ததுடன், இரும்பு கம்பியால் திலீப்குமாரை தாக்கினர். படுகாயம் அடைந்த திலீப்குமார் தப்பி ஓடினார். துரத்திச் சென்று மீண்டும் திலீப்குமாரை தாக்கியதில், பலத்த காயம் அடைந்தார். உடனே திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் தப்பி ஓடினர்.

அங்கிருந்தவர்கள் திலீப் குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோரை தேடி வந்தனர்.

சேலம் அரசு மருத்துவ மனையில் திரண்ட திலீப்குமார் உறவினர்கள், பிரேதபரிசோதனை முடிந்து உடலை வாங்க மறுத்து மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர உதவி காவல் ஆணையர் ஈஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகள் திருநாவுக்கரசு மற்றும் சரவணனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சரவணன் இரு வரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x