Last Updated : 20 Aug, 2019 05:36 PM

 

Published : 20 Aug 2019 05:36 PM
Last Updated : 20 Aug 2019 05:36 PM

அனுமதி இல்லாமல்  சிறுவனை தத்துக்கொடுத்த காப்பகம்: மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போலீஸ்  

மதுரை,

மதுரையில் உறவினர் அனுமதியின்றி தத்துக் கொடுக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டார்.

மதுரை வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு பருவதராஜ் (17), குரு விக்னேஷ் (13) ஆகிய மகன்களும், தனஸ்ரீ (10) இலக்கியா (19) என்ற மகள்களும் உள்ளனர்.

கடந்த 2012 மற்றும் 2014-ல் அந்தத் தம்பதியினர் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இதன்காரணமாக 4 குழந்தைகளும், ஜான்சி ராணி உட்பட அவர்களது மூன்று அத்தைகள் உதவியுடன் மதுரை கடச்சனேந்தலிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர். இந்தக் காப்பகத்தில் 4 பேரும் படித்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், பருவதராஜ் காப்பகத்தில் சேட்டை செய்வதாக அவரது அத்தைகளுக்கு காப்பக நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பருவதராஜை மூத்த அத்தை ஜான்சிராணி அழைத்துவந்து, அவரது முயற்சியில் மதுரை தொழிற்பயிற்சி பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்.

இதற்கிடையில் ஜான்சிராணி உட்பட உறவினர்கள் அனுமதியின்றி மற்றொரு குழந்தையான குரு விக்னேஷை வேறு தம்பதிக்கு காப்பக நிர்வாகம் தத்துக் கொடுத்தது தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 4 பேரையும் தங்களிடமே காப்பக நிர்வாகம் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜான்சிராணி உட்பட அவரது சகோதரிகள் புகார் தெரிவித்தனர்.

எஸ்பி.யின் உத்தரவின் பேரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட போலீஸார் காப்பக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏற்கெனவே பருவதராஜ் மீட்கப்பட்ட நிலையில், குருவிக்னேஷ், தனஸ்ரீ ஆகியோரையும் மீட்டு அவர்களது அத்தைகளிடம் ஒப்படைத்தனர்.

ஆசிரியர் பயிற்சி பயிலும் இலக்கியா காப்பகத்திலேயே தங்கிப் படிக்க விரும்பியதால் அவரை காப்பகத்தில் விட்டுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x