Last Updated : 19 Aug, 2019 03:49 PM

 

Published : 19 Aug 2019 03:49 PM
Last Updated : 19 Aug 2019 03:49 PM

பேராசிரியை நிர்மலாதேவிக்காக நீதிமன்ற வளாகத்தில் தியானம் செய்த இளைஞர்: ரசிகர் எனக் கூறியதால் சலசலப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சர்ச்சையில் சிக்கிய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கிலிருந்து விடுபடவும், உடல்நலம் பெறவும் வேண்டி அவரின் 'ரசிகர்' எனக் கூறிக்கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) தியானத்தில் ஈடுபட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டியிருந்தது.

ஆனால், உடல்நிலை சரியில்லை எனக்கூறி பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் விடுப்பு மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

தியானம் செய்த இளைஞர்:

வழக்கு விசாரணைக்காக ஆஜராகவரும் நிர்மலாதேவியைப் பார்ப்பதற்காக ஒவ்வெரு முறை விசாரணை நடைபெறும்போதும் உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் வருவது வழக்கம். அவர் எப்போதுமே தன்னை நிர்மலாதேவியின் ரசிகர் என அடையாளம் காட்டிக் கொள்வார்.

அதேபோல், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதும் அன்பழகன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

ஆனால், பேராசிரியை நிர்மலாதேவி வராததால் ஏமாற்றமடைந்த அன்பழகன், நிர்மலாதேவியின் உடல்நலம் பெறவும், வழக்கிலிருந்து விடுதலையாகவும் வேண்டி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீதிமன்ற வளாகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி எந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாரோ அதே இடத்தில் அமர்ந்து ஒரு நிமிடம் தியானம் செய்தார். அவரை அங்கிருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் வினோதமாகப் பார்த்தனர். சிறிது நேரத்தில் அங்கு சிறு கூட்டமும் கூடியது. இதனையடுத்து அந்த இளைஞர் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x