Published : 13 Aug 2019 09:07 PM
Last Updated : 13 Aug 2019 09:07 PM

நேர்கொண்ட பார்வையும் “காவலனுக்கான” தேவையும் : காவல் துணை ஆணையரின் அறிவுரை

நேர்கொண்ட பார்வை படத்தைப்பார்த்த நெல்லை துணை ஆணையர் சரவணன், அந்தப்படத்தின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு காவல்துறையின் ‘காவலன் எஸ்.ஓ.எஸ்’ செயலி குறித்து பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி வகிக்கும் சரவணன் சமூக அக்கறைக்கொண்ட காவல் அதிகாரி ஆவார். அவரது முகநூலில் இளைஞர்களுக்கு, பொதுமக்களுக்கு அதிகம் வழிகாட்டும் பதிவுகளை போடும் இயல்புள்ளவர்.

பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்வதன் அவசியம் குறித்த பதிவுகளும், இளம் பருவத்தினரை முன்னேற்ற வழிகாட்டும் பதிவுகளும் அதிகம் இருக்கும்.

இதன்காரணமாக அவரைப் பின்பற்றுவோரும் அதிகம். அனைவருக்கும் காவல்பணி குறித்த விழிப்புணர்வும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்குறித்தும் முகநூலை பயன்படுத்துவதால் அதிகமான இளம் சமுதாயத்தினருக்கு அது பயனுள்ளதாக அமைகிறது.

காவற்பணி சமுதாயப்பணி, குற்றத்தடுப்பு முதன்மைப்பணி என்ற எண்ணத்துடன் செயல்படும் அதிகாரிகளில் ஒருவரான துணை ஆணையர் சரவணன் நேர்கொண்டப்பார்வை படம் குறித்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் முகநூலில் பதிவு செய்துள்ள கருத்து:

“நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.

நடிகர் அஜித்குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.

சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார் !

பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்...

* பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும் .

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.

* குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரணதண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேறியுள்ளது .இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.

* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.

* அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.

பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை.

நேர்கொண்டபார்வை இக்காலத் தேவை”

இவ்வாறு துணை ஆணையர் சரவணன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x