Last Updated : 08 Aug, 2019 03:35 PM

 

Published : 08 Aug 2019 03:35 PM
Last Updated : 08 Aug 2019 03:35 PM

விருது நகரில் பணப் பிரச்சினையால் பெண் கொலை; பக்கத்து வீட்டு நபர் கைது

பணப்பிரச்சினையால் விருதுநகர் அருகே பெண் ஒருவரைக் கொலை செய்த பக்கத்து வீட்டு நபர், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி, கட்டக்கஞ்சம்பட்டியில் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையால் அங்காள ஈஸ்வரி (35) என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் அடைக்கலம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சம்பட்டியில் வசித்து வருபவர்கள் திருமுருகன் -அங்காள பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். திருமுருகன் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் அடைக்கலம் (36) . அருகில் உள்ள தனியார் பஞ்சாலையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். திருமுருகன் மனைவி அங்காள பரமேஸ்வரிக்கும் அடைக்கலத்துக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் இருந்துள்ளது. இதனால் அங்காள பரமேஸ்வரி அடிக்கடி அடைக்கலம் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சனை காரணமாக அடைக்கலம் வீட்டிற்குச் சென்றுள்ளார் அங்காள பரமேஸ்வரி. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அடைக்கலம், அங்காள பரமேஸ்வரியைக் கீழே தள்ளி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே அங்காள பரமேஸ்வரி உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக அங்காள பரமேஸ்வரியின் உடலை யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிலேயே எடுத்துச் சென்று போட்டுள்ளார் அடைக்கலம்.

பணி முடிந்து வீடு திரும்பிய அங்காள பரமேஸ்வரியின் கணவர் திருமுருகன், மனைவி பேச்சு மூச்சற்று இருப்பதைக் கண்டு உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்காள பரமேஸ்வரியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தி காவல்துறைக்குக் தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர், சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து அங்காள பரமேஸ்வரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் அங்காள பரமேஸ்வரியின் உடலில் சில காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடைக்கலம் வீட்டிற்கு அடிக்கடி அங்காள பரமேஸ்வரி சென்று வந்தது தெரிய வந்துள்ளது. அடைக்கலத்திடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அடைக்கலத்தை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அங்காள பரமேஸ்வரியை, தான் கொலை செய்ததை அடைக்கலம் ஒப்புக்கொண்டார். அடைக்கலத்தைக் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x