Published : 03 Aug 2019 08:11 AM
Last Updated : 03 Aug 2019 08:11 AM

பல நாள் துணி வியாபாரம்; சில நாள் திருட்டு: வயதான பெண்களிடம் நகை பறித்தவர் கைது

சென்னை

சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:

பிடிபட்ட நபரின் பெயர் புஷ்பராஜ் என்ற அமீர்பாட்சா (71). கோவில்பட்டியை சேர்ந்தவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்னை வந்துள்ளார். செங்குன்றத்தில் சாலையோரம் துணி விற்பனை செய்துவரும் அவர், மாதத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் திருட்டு வேலையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மருத்துவமனைகளுக்கு தனியாக வரும் வயதான பெண்களிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். முதியோர் உதவித் தொகை, வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்வார். நகையுடன் சென்றால் உதவி கிடைக்காது என்று கூறி, நகையை கழற்ற வைப்பார். அதை பொட்டலத்தில் மடிப்பதுபோல நடித்து, அதை திருடிக்கொண்டு, கல்லை பொட்டலம் கட்டிக் கொடுத்து அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x