Published : 31 Jul 2019 12:43 PM
Last Updated : 31 Jul 2019 12:43 PM

கரூர் இரட்டைக் கொலை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

மதுரை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் தேடி வரும் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட் டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர் (70), கோயில் பூசாரி. இவரது மனைவி தாமரை (65). இவர்களின் மகள்கள் அன்னலட்சுமி (38), சரஸ்வதி (35). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை. மகன் நல்லதம்பி (44), மருமகள் தமிழரசி (32). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர்.

முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான 198 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் முன்னர் இருந்தது. இதில், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகக் கூறி 158 ஏக்கர் நிலத்தை சிலர் பட்டா போட்டு அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குளத்துக்கென மீதம் இருந்த 40 ஏக்கர் நிலத்தையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து வீரமலை, நல்லதம்பி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரிடமும் கடந்த பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நல்லதம்பி மற்றும் அவரது தந்தை வீரமலை மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில், வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி கடந்த திங்கள்கிழமை (ஜூலை 29) கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடரக் காரணமாக இருந்த தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்கிற செளந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஆகியோர் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று (ஜூலை 31) சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பின்னர் 6 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கி.மகாராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x