திருநின்றவூர் அருகே திருட முயன்ற இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

திருட முயன்ற நபர்
திருட முயன்ற நபர்
Updated on
1 min read

திருவள்ளூர்

திருநின்றவூர் அருகே திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்(38). இவர் அதே பகுதி திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டு பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து வீட்டில் நந்தகுமாரும், அவரது தாய் லோகம்மாளும் இருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை இருவரும் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கடையை திறக்க சென்றனர். பின்னர் லோகம்மாள் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைந்து கிடந்ததைப் பார்த்து அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

யார் நீ வீட்டுக்குள் எப்படி வந்தாய்? என லோகம்மாள் கேட்க,  அந்த இளைஞர், லோகம்மாளை மிரட்டி, தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றார். லோகம்மாள் திருடன், திருடன் என கூச்சலிட்டதும் அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதுபற்றி செவ்வாய்ப்பேட்டை போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்நபரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அந்நபர் திருநின்றவூரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-நாகராஜன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in