

நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக 1996-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் உமா மகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உமா மகேஸ்வரி தன் கணவர் முருக சங்கரனுடன்நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களைச் சரமாரியாக வெட்டியது. இதைத் தடுக்க வந்த பணிப்பெண் மாரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. கொலைக்கான காரணம் என்ன? சொத்து தகராறா? முன் பகையா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.