முதல்வர் எடப்பாடியை கடத்துவேன்: மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

முதல்வர் எடப்பாடியை கடத்துவேன்: மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
Updated on
1 min read

முதல்வர் எடப்பாடியை கடத்துவேன் என தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் பேசிய மர்ம தொலைபேசி ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தான் கடத்த உள்ளதாக தெரிவித்து போனை வைத்துவிட்டார்.

இதனால் அதிர்ந்துப்போன கட்டுப்பாட்டறை காவலர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போனில் பேசிய நபரை பிடிக்க உத்தரவிடப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் போன் கால் திருச்சி, தில்லைநகரிலிருந்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட எண்ணில் பேசிய நபரை பிடித்தனர்.

அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துவந்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ரஹ்மதுல்லா என்பதும், அருகில் உள்ள துரித உணவகத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. சமீப காலமாக மன உளைச்சலில் இருந்த அவர், வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இவ்வாறு போன் செய்ததாக தெரியவந்தது.

போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக குண்டு வைப்பதாகத்தான் போன் கால் வரும், இந்தமுறை முதல்வரையே கடத்தப்போகிறேன் என்று போன் வரவும் போலீஸார் பரபரப்பாகிவிட்டனர். ஆனால் முதல்வர் வழக்கம்போல் தனது துறையான காவல்துறை மானியகோரிக்கை விவாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in