Published : 19 Jul 2019 07:08 PM
Last Updated : 19 Jul 2019 07:08 PM

மிரட்டல் டிக்டாக் காணொலி வெளியிட்ட நபர்களை வாழ்த்திப்பாட வைத்த போலீஸார்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி மாதம் வழக்கு ஒன்றுக்காக பி.எம்.தர்காவில் விசாரிக்கச் சென்ற போலீஸை தாக்கி வாக்கி டாக்கியை பறித்துச் சென்றதாக புகார் எழுந்தது.
இதில் காவலர் ராஜவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காவலர் ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீஸார், ஆனந்தனை தேடி வந்தனர். சென்னை மத்ய கைலாஷ் அருகே பதுங்கியிருந்த ஆனந்தனை பிடிக்கும் முயற்சியில் ஆனந்தன் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது முதலாமாண்டு நினைவஞ்சலி கடந்த 3-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது அவரது நண்பர்கள்  திருவல்லிக்கேணி துவாரகா நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (18), ரோட்டரி நகர் 15 வது தெருவைச் சேர்ந்த விஜய்(21), 10-வது தெருவைச்சேர்ந்த கார்திக்(எ)காவா கார்த்திக்(25), பிரசாத்(23), பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்த சமீர் பாஷா(22) ஆகிய  அனைவரும்  கானா கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அனகாபுத்தூரைச் சேர்ந்த கானா பாடகர் மணிகண்டன் (எ) சேட்டு (29),  எனபவரை அழைத்திருந்தனர். பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விபரத்தைச் சொல்லி ஆனந்த் மரணத்துக்கு பழிவாங்கும் விதத்தில் பாடலை பாடச்சொல்ல, கானா மணிகண்டனும் உடனடியாக பாடலை பாட அதை செல்போனில் பதிவு செய்தவர்கள் அதை டிக்டாக் காணொலியில் வெளியிட்டனர்.
அதில் கானா மணிகண்டன் பாட மற்றவர்கள் உடன் பாடுவதாக காட்சி அமைந்திருந்தது. அதில் உள்ள வரிகள்:  “ஜாதி மதம் வேணா, ஆனந்தண்ணனுக்கு அன்பு மட்டும் போதுண்டா… வந்துட்டண்டா.. வந்துட்டண்டா, எங்க ஆனந்தண்ணன செஞ்சவன போட வந்துட்டண்டா..அடிப்பேண்டா அடிப்பேண்டா மட்ட (கொலை) ஒன்னு அடிப்பேண்டா” என்று மிரட்டும்வகையில் கானா பாட மற்றவர்கள் ஆர்ப்பரித்திருப்பார்கள்.
அது வைரலாக பரவியது. போலீஸை மிரட்டும் டிக்டாக் காணொலியை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காணொலியைப் பார்த்த போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் கானா பாடல் பாடி டிக் டாக்கில் பதிவிட்ட அனகாபுத்தூர் கானா பாடகர் உள்ளிட்ட அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை கைது செய்த போலீஸார் சிறைக்கு அனுப்பும் முன் அவர்களை அவர்கள் போலீஸை மிரட்டி பாடிய அதே சுடுகாட்டில் நிற்கவைத்து போலீஸாரை வாழ்த்தி பாடவைத்து பின்னர் சிறையில் அடைத்தனர். அந்த பாடல் வரிகள் இரவு பகலும் தூங்காமல் வேலை செய்பவர் தன் குடும்பத்தையே மறந்து நம்மை காப்பாற்றுபவர், நம் நண்பர்களோ யாருங்க காவல்துறைத்தானுங்க…காவல்துறை இல்லையின்னா சுடுகாடாகும் ஊருங்க அதை எடுத்துச் சொன்னா கேளுங்க… என அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் என எம்ஜிஆர் பட பாடல் ஸ்டைலில் பாடுகின்றனர்.
இன்னொரு காணொலியில் சொன்னபேச்ச நீயும் கேக்கணும், காவல்துறை சொன்னப்பேச்சை நீயும் கேக்கணும், சொன்னப்பேச்ச நீயும் கேக்கணும் நீ கேக்கலனா நாசமாகணும், எங்கேயும் நீ சுத்தாததடா போலீஸு இல்லன்னா நாம ஏதடா… என பாடுகின்றனர். 
போலீஸை மிரட்டி காணொலி வெளியிட்டவர்கள் அதே வாயால் வாழ்த்தி பாடுவது நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x