Published : 17 Jul 2019 09:51 PM
Last Updated : 17 Jul 2019 09:51 PM

போலீஸாருக்கு சவால் விட்டு டிக்டாக்கில் கானா பாட்டு: பாடகர் உட்பட 6 பேர் கைது

போலீஸ் என்கவுண்டரில் பலியானவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நாளில் அவரது மரணத்துக்கு காரணமாக பழிவாங்கப்போகிறோம் என போலீஸுக்கு எதிராக பாடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட நண்பர்களும் கானா பாடகரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி மாதம் வழக்கு ஒன்றுக்காக பி.எம்.தர்காவில் விசாரிக்கச் சென்ற போலீஸை தாக்கி வாக்கி டாக்கியை பறித்துச் சென்றதாக புகார் எழுந்தது.

இதில் காவலர் ராஜவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காவலர் ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீஸார், ஆனந்தனை தேடி வந்தனர். சென்னை மத்ய கைலாஷ் அருகே பதுங்கியிருந்த ஆனந்தனை பிடிக்கும் முயற்சியில் ஆனந்தன் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது முதலாமாண்டு நினைவஞ்சலி கடந்த 3-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது அவரது நண்பர்கள் கானா கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அனகாபுத்தூரைச் சேர்ந்த கானா பாடகர் மணிகண்டன் எனபவரை அழைத்திருந்தனர்.

பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விபரத்தைச் சொல்லி ஆனந்த் மரணத்துக்கு பழிவாங்கும் விதத்தில் பாடலை பாடச்சொல்ல, ஆசுகவியான மணிகண்டனும் உடனடியாக பாடலை பாட அதை செல்போனில் பதிவு செய்தவர்கள் அதை டிக்டாக் காணொலியில் வெளியிட்டனர்.

அது வைரலாக பரவியது. டிக்டாக் காணொலியை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காணொலியைப் பார்த்த போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் கானா பாடல் பாடி டிக் டாக்கில் பதிவிட்ட அனகாபுத்தூர் கானா பாடகர் மணிகண்டன் (எ) சேட்டு (29), திருவல்லிக்கேணி துவாரகா நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (18), ரோட்டரி நகர் 15 வது தெருவைச் சேர்ந்த விஜய்(21), 10-வது தெருவைச்சேர்ந்த கார்திக்(எ)காவா கார்த்திக்(25), பிரசாத்(23), பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்த சமீர் பாஷா(22) ஆகிய  அனைவரும் இன்று மதியம் போலீஸாரிடம் சிக்கினர். 

அவர்களை கைது செய்த போலீஸார் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலைமிரட்டல், காணொலிமூலம் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x