

சென்னை: காவலரை தாக்கியதாக பாஜக, தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலையில் உள்ள தனியார் மதுபான பார், நேற்று முன்தினம் இரவு 11 மணியை கடந்தும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை காவலர் சலீம், மதுபான பாரை உடனடியாக மூடும்படி கூறியுள்ளார். அப்போது, பாரினுள் மது அருந்திக் கொண்டிருந்த 5 நபர்களை வெளியே வரும்படி சலீம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சலீமுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் சலீமை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த சலீம், இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள், குன்றத்தூரை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகநாதன் (51), அனகாபுத்தூரை சேர்ந்த தேமுதிக நிர்வாகி மகாதேவன் (56), மற்றும் தனசேகர் (52), ரவி (50), சரவணன் (50) என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் போலீஸார் தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.