

காரைக்கால்: காரைக்காலில் இருந்து இலங்கைக்கு ரூ.6.08 கோடி மதிப்பிலான 7.605 கிலோ போதைப் பொருளை கடத்த முயற்சித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட எஸ்எஸ்பி வினய் குமார் காட்கே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: வரும் 2029-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமரின் இலக்கை நிறைவேற்றும் வகையில், காரைக்கால் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 5-ம் தேதி காரைக்கால் மேட்டைச் சேர்ந்த நிஜந்தன்என்பவரிடம் இருந்து 1.438 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் இதை இலங்கைக்கு கடத்த முயன்றதும், இதில், நிஜந்தனின் மைத்துனரான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் அவரது கூட்டாளியான இலங்கையைச் சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 7.605 கிலோ போதைப் பொருள், 3 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தோராயமான சந்தை மதிப்பு ரூ.6.08 கோடி ஆகும்.
இதேபோல, கீழவாஞ்சூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 10.84 கிலோ கஞ்சாவும், கோட்டுச்சேரி பகுதியில் சிக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.